Wednesday, October 30, 2013

தீபாவளி..!!!!

தீபங்களின் அணி வரிசையாம் தீபாவளி பண்டிகை, பழங்காலம் முதலே கொண்டாடப்பட்டு இருக்கலாம் என வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். தீபாவளி என்றால் பாட்டாசு, இனிப்பு வகைகள், சினிமா, லேட்டஸ்டாக, இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக பார்க்கும் படம் என எண்ணற்ற காரியங்கள் நமக்கு தெரியும். ஆனால், தீபாவளிக்கென ஒரு வரலாறு உள்ளது.உலகில் உள்ள எல்லா இந்துக்களும் இத்தினத்தைக் கொண்டாடுகிறார்கள். இது மிக மிகப் பழங்காலதிருந்த்தே இந்துக்களின் வாழ்க்கையோடு கலந்துபோன கொண்டாட்டமாகும்.

உண்மையில் தீபாவளி என்றால் என்ன, ஏன் கொண்டாடுகிறோம்...???

நரகாசுரனை அழித்து விட்டதால் மட்டும் நம் வாழ்வில் ஒரு ஒளி பிறந்துவிட்டதா?. தீபாவளிக்கும் நரகாசுரனுக்கும் துளியும் சம்பந்தமில்லை. நரகாசுரன் வெறும் கதை மட்டுமே. வரலாறு அல்ல.

நமது மனதில், எண்ணங்களில், சிந்தனைகளில், பேச்சுக்களில், பார்வைகளில், செயல்களில் அசுரன் இன்னமும் குடி கொண்டிருக்கிறானே.வறுமையிலும், பசியிலும், பட்டினியிலும், சுகவீனங்களிலும், துக்கங்களிலும், துயரத்திலும் நம்மை வாட்டி வதக்கிக் கொண்டிருக்கிறானே.

கோபம், பொறாமை, அழுக்கு, பார்வைகள், வக்கிர புத்திகள், ஏமாற்றுவது, புறங்க்கூருவது, சுய நலம், திருட்டு, வரதட்சணை இன்னும் பல நம்மில் ஒழிந்து கொண்டு குடியிருக்கும் அசுரனின் செயல்பாடுகள் அல்லவா ?.

ஒரு அறையின் இருட்டை போக்க எப்படி வெளிச்சம் தேவை படுகிறதோ, அது போல், நம்மில் இருக்கும் இருட்டு என்ற அசுரனை ஒழிக்க, அழிக்க ‘ஞான ஒளி’ ‘அறிவு ஒளி’ ‘உண்மை ஒளி’ என்ற வெளிச்சம் தேவை படுகிறது. அறையில் இருக்கும் இருட்டை போக்க தீபத்திலான விளக்கின் மூலம் வெளிச்சம் வந்தது. இந்த தீபத்தினால் ஒளியைப் போல நம்மில் இருக்கும் இருட்டை போக்க வேண்டும் என்று உவமையாகக் கூறப் பட்டது. ‘தீப ஒளி’ என்றும் அழைக்கப்பட்டது.
‘தீப ஒளி’ என்பதே காலப்போக்கில், பேச்சு வழக்கில் ‘தீபாவளி’ என்றானது..

நாம் புனிதமாவதற்குத்தான் வெடி வெடிக்கிறோம். அதாவது சில பொருட்களை அழிப்பதற்கு அதனை கொளுத்துகிறோம் அல்லவா அதுபோன்றுதான் நமது மனதில் இருந்த தீய எண்ணங்களை வெடி வெடிப்பது போல் சிதறடித்துவிட வேண்டும் என்பதற்காக வெடி வெடிக்கிறோம்.

நீங்களும் மனசுல இருக்குற கெட்ட 
விஷயங்களை தூக்கி போட்டுட்டு ஒரு இனிய நாளை கொண்டாடுங்க...!!!

Wednesday, August 21, 2013

என் அக்கா...!!!

அப்பாவின் அடியிலும்..,
அம்மாவின் திட்டிலும்..,
என்னை அரவணைத்தவள்..!!!

துக்கங்களை பகிர்ந்த்துகொள்ளவும் ..,
மகிழ்ச்சியை கொண்டாடவும்..,
தோளில் சாய்ந்து அழவும்..,
மனது ஆற்றி கொள்ளவும் ..
இன்றுவரை இவள் போல் 
ஒரு தோழி கிடைக்கவில்லை..!!!

இவளை அக்காவாக பெற்ற நானும் ஒரு பாக்கியசாலியே...!!!

**என்னுடைய அக்கா வசந்தி பாபுவுக்காக நான் எழுதிய ஒன்று..

Tuesday, August 20, 2013

கார்ப்பரேட் உலகம்...!!!!

"C" படித்தால்
சீனியர் ஆகிவிடலாமென்று
சிலிர்த்து கொண்டிருக்கையில்..!!!

"C++"-யையும் படித்துவா என்று
ஓய்வெடுக்க அனுப்பியது இந்த
ஒய்யார கார்ப்பரேட் உலகம்..!!!

அதையும் படிக்கையில்..,
அற்புத "JAVA"-வையும்
அறிந்து வாயென்று
அதிர்ச்சி அளித்தது
இந்த கொடிய உலகம்..!!!

""என்று தணியும் உந்தன் ஆசை..!!
என்று கிடைக்கும் எனக்கு வேலை...??""

Friday, August 9, 2013

பித்தனானேன்...!!!

அவள் மண்ணுலக பெண்ணும்மல்ல,
விண்ணுலக தேவதையும் மல்ல,
கற்பனை உலகின் மாயமும்மல்ல,
நிதர்சன உலகின் இசைக்கப்படாத இசை
பாடப்படாத கவிதை;புனையப்படாத பேரிலக்கியம்

அந்த உலகில் நான் என்னை இழந்தேன்
அவள் கூடுவிட்டுக் கூடு பாய்ந்து என்னுள் உயிர்த்தாள்
நான் அவளாகவே உணர்ந்து,சிந்தித்து செயற்பட்டேன்.

அவள் சிருஷ்டித்த உணர்சிகளே என் இயக்க சக்தியானது!
என் மொழி வார்த்தைகளை தொலைத்து மௌனித்தேன்
மனித பிரக்ஞைகளை மரித்து எனை அவள் பித்தனாக்கினாள்...!!

Thursday, August 8, 2013

எனக்கு பிடித்த / என்றும் மக்கள் மனதிலுள்ள உ.சகாயம் ஐ.ஏ.எஸ் !!

கற்றவராக இருந்தால் மட்டும் போதாது, தான் கற்ற கல்வியை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். அப்போது சிறப்பு

மாவட்ட ஆட்சியர்கள் எத்தனையோ பேர் இருந்திருக்கிறார்கள், ஆனால், ஒரு சிலரே மக்கள் மனதில் ஆழமாக, நீங்காத இடம் பிடித்திருப்பார்கள்.

அப்படி, மக்கள் இடத்தே ஒரு பெரும் மதிப்பைப் பெற்றவர், திரு. உ. சகாயம் அவர்கள். இவரை அறியாதவர் யாரும் இருக்க வாய்ப்பில்லை இங்கே!

சிறுவயதில் என்ன நமக்குக் கற்றுக் கொடுக்கப் படுகிறதோ, அது தான் ஆழமாக மனதில் நிற்கும். இவர் இந்த நிலையில், இத்தனை நல்லவராய் இருக்க முக்கியக் காரணம் இவரது தாய் தான் என்பதைச் சொல்லவும் வேண்டுமா?

சிறுவயதில், கீழே விழுந்து கிடந்த மாம்பழங்களை எடுத்துக் கொண்டு வந்து இவர் அம்மாவிடம் கொடுத்திருக்கிறார். அந்த மாம்பழம் இவர்களுக்குச் சொந்தமானது இல்லை என்ற காரணத்தால், அதைத் தூக்கி ஏறியச் செய்திருக்கிறார் அவரது அம்மா. மற்ற சிறுவர்களும் மாம்பழம் எடுத்துச் சென்றதாகச் சொல்லி இருக்கிறார் இவர்.

எல்லோரும் செய்தார்கள் என்பதால், தவறு என்றுமே சரியாகிவிடாது, என்று அறிவுரை சொல்லி இருக்கிறார், அம்மா.

அன்று அம்மா சொன்னதன் பயன் தான் இன்று, இவ்வளவு நேர்மையானவராக நிற்கிறார், நிமிர்ந்து நிற்கிறார் நமது சகாயம் அவர்கள்.

கொள்கை:

ஒவ்வொருவருக்கும் ஒரு கொள்கை இருக்கும், அந்த கொள்கை எத்தகையது என்பதே, அவர் எத்தகையவர் என்பதைத் தீர்மானிக்கும். இதோ, நமது சகாயம் அவர்களின் கொள்கைகள் நாம் அறிந்தவையே,
“உனக்கு அதிகாரம் இருந்தால் அதை ஏழைகளின் மேம்பாட்டிற்கு பயன்படுத்து” “லஞ்சம் தவிர்த்து, நெஞ்சம் நிமிர்த்து”

குறிப்பாக ஏழைகளுக்காக உழைப்பவர். தீமைகள் எங்கிருந்தாலும் எதிர்ப்பவர். அதனால் ஏற்படும் விளைவுகளை எண்ணி, தனக்கு பாதிப்பு ஏற்படும் என்று எண்ணி, என்றுமே இவர் அஞ்சியதில்லை.

இவரது தன்னலமற்ற நல்ல சேவைக்குக் கிடைத்த பெரிய பரிசு என்ன? நாம் அறிந்தது போல,பதினெட்டு முறை வேலை மாற்றம் இருபது ஆண்டுகளில்! இன்னும் சரியாகச் சொல்ல வேண்டும் என்றால், பத்தொன்பது முறை இருபத்தி ஒரு ஆண்டுகளில்!

இது போல் நல்ல நல்ல பரிசுகளை எல்லாம், உயர்ந்த சேவை செய்பவர்களுக்குக் கொடுக்க, இங்கு நம் நாட்டில் தானே முடியும்?

ஏழைகளுக்கு மட்டும் அல்ல, மாணவர்களுக்கும் சிறந்த வழிகாட்டியாக இருந்து வந்திருக்கிறார் சகாயம் அவர்கள். மாணவர்களோடு பேசும் போது, மாணவர்கள் யாராவது நானும் உங்களைப் போல ஐ.ஏ.எஸ். அதிகாரியாக வேண்டும் என்று சொன்னால், ” இன்று நீங்கள் நேர்மையாக இருப்பேன் என்று சொல்வது எளிது, ஆனால், இறுதி வரையில் உங்கள் வேளையில் நீங்கள் நேர்மையாக இருப்பீர்களா?” என்று கேட்பாராம்.

ஒரு நல்ல சமூகம் உருவாக வேண்டும், மாணவர்கள் மனத்திலும் நேர்மையை இப்போதே விதைக்க வேண்டும் என்ற அவரது அக்கறையை, இதை விட விளக்கமாக சொல்ல வேண்டுமா என்ன?

ஒரு பெரியவர் புகார் கொடுத்திருக்கிறார், தான் வாங்கிய பெப்சியில் ஏதேதோ மிதப்பதாக, உடனே அந்த பெப்சியை பரிசோதனைக்கு அனுப்பி, பரிசோதனை முடிவு – அந்தப் பெப்சி அருந்த ஏற்றது இல்லை என்று வந்ததும், உடனே அந்த பெப்சி தயாரிக்கும் “யூனிட்டிற்கு” “சீல்” வைத்திருக்கிறார்.

அப்போது அவர் காஞ்சிபுரத்தில் டி.ஆர்.ஓ-வாகப் பணியாற்றிக் கொண்டிருந்தார், “சீல்” வைக்க அவரோடு வந்த தாசில்தார் பயந்திருக்கிறார், “இதெல்லாம் மாவட்ட ஆட்சியரிடம் கேட்க வேண்டும்”, என்று. அவருக்கும் தைரியம் கொடுத்து, இதைச் செய்யே நமக்கே அதிகாரம் இருக்கிறது என்று சொல்லி சீல் வைக்க அழைத்துச் சென்றிருக்கிறார்.

தனது மகளுக்கு உடல் நிலை சரியில்லாத போது, கையில் நான்காயிரம் பணம் இல்லாமல் கடன் வாங்கி வைத்தியம் பார்த்தவர் இவர். அப்போது அவருக்கு மதுபானக் கடைகள் ஒரு கடைக்கு பத்தாயிரம் ரூபாய் தர தயாராக இருந்திருக்கின்றன. ஆனாலும் அவர் அந்த சூழ்நிலையிலும் லஞ்சம் வாங்கவில்லை, தெரிந்தவரிடம் கடன் வாங்கி மருத்துவம் பார்த்துவிட்டு கடனை உடனே அடுத்தமாதம் சம்பளம் வந்ததும் திருப்பிக் கொடுத்திருக்கிறார்.

பொதுமக்கள் எப்போதும் தொடர்பு கொள்ளலாம் என்று அவரது தொலைபேசி எண்ணி அவர் வெளியிட்டிருக்க, “சார், கேஸ் கம்பனிக்கு போன் போட்டா எடுக்க மாட்டிக்காங்க”, இப்படி எல்லாம் அழைப்பு வந்திருக்கிறது. ஆனாலும், பொறுமையாக இது போன்ற அழைப்புகளையும் விசாரித்து உதவுமாறு உத்தரவிட்டிருக்கிறார்.

மதுரையில் சரியாக தேர்தல் நடைபெறுவதற்கு இவர் ஆற்றிய பணியை சொல்லவும் வேண்டுமா? திருமங்கலம் தேர்தல் மிகவும் நேர்மையான முறையில் நடக்க இவர் தானே காரணமாய் இருந்தார்.

இன்று நடந்து கொண்டிருக்கும் “கிரானைட் ஊழல்” வழக்கு, அந்த ஊழல் குறித்த விபரங்கள் வெளி வருவதற்குக் கூட, இவர் முதன் முதலில் இது குறித்து தீவிரமாக விசாரணை செய்தது தான் காரணம்.

எதற்கும் பயம் இல்லை, நேர்மை, அது தான் இவரது கொள்கையாக இருக்கிறது.

ஆற்றிய பணிகள்:

தர்மபுரியில் பயிற்சி ஆட்சியர்

நீலகிரி மாவட்டம், கூடலூரில், கோட்ட வளர்ச்சி அதிகாரி

திருச்சி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது)

கள்ளக்குறிச்சி சர்க்கரை ஆலை சிறப்பு அதிகாரி

காஞ்சிபுரம் கோட்ட வளர்ச்சி அதிகாரி

திருச்சி உணவு பொருள் வழங்கல் துறையின் முதுநிலை மண்டல மேலாளர்

கோவை ஆயப்பிரிவு துணை ஆணையாளர்
சென்னை, மாவட்ட வருவாய் அதிகாரி

தொழில் வணிகத்துறை இணை இயக்குனர்
மாநிலத் தேர்தல் ஆணையச் செயலர்

நுகர்பொருள் வழங்கல் துறை இணை ஆணையர்
நாமக்கல் மாவட்ட ஆட்சியர்

புது திருப்பூர் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குனர்
மதுரை மாவட்ட ஆட்சியர்

கோஆப்டக்ஸ் நிர்வாக இயக்குகனர் (தற்பொழுது)
சொந்தம்:

ஊர் : புதுக்கோட்டை மாவட்டம், சித்தன்னவாசல் அருகில் உள்ள பெருஞ்சுணை கிராமம்.

பெற்றோர்: உபகாரம் பிள்ளை – சவேரி அம்மாள்.

மனைவி: விமலா.

பிள்ளைகள்: யாழினி, அருண்.

இவர், இவரது பெற்றோருக்கு நான்கு மகன்களில், இளையவர். இவரது அப்பாவின் ஆசைக்காக, லட்சியத்தோடு படித்து இன்று ஐ.ஏ.எஸ் அதிகாரியாகி இருக்கிறார்.இப்போது, இவரது மகளுக்கும் மாவட்ட ஆட்சியர் ஆக வேண்டும் என்பது லட்சியமாம்.

இன்னும் வருங்காலத்தில் நாம் எதிர்பார்க்கலாம் இன்னொரு பெண் சகாயம் அவர்களை.

இது போன்று நேர்மையானவர்கள் குறைவு தான், காரணம், நூறு தீயவர்களை அழிக்க, ஒரு நல்லவர் போதும். தீமையும் நன்மையையும் சமமான சக்தி கொண்டவை இல்லை தானே? அதனால் தான் போலும், சக்தி கொண்ட நல்லவர்கள் குறைவாகவே இருக்கிறார்கள்!

நேர்மைக்கு எடுத்துக்காட்டாய் விளங்கிய ஒருவர் தற்போது கோஆப்டக்ஸ் நிர்வாக இயக்குனராக
பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளது வேதனைக்குரிய ஒன்றாகும்….

காதல்

தொலைவில் உன் பெயர் கேட்டால்..
மனதில் ஏனோ தத்தளிப்பு..
உன்னைப்பற்றி யோசித்தால்..
இதழில் ஓர் ஓரச்சிரிப்பு..!!

நெடுந்தூரம் சென்று விடாதே கண்ணே..,
நினைவுகளில் கூட
மூச்சடைத்து போவேன்
உன் சுவாசமின்றி..!!!

Tuesday, August 6, 2013

உலகைக் குலுக்கிய புகைப்படம் !! நெஞ்சில் புதைந்த அமெரிக்காவின் அணு குண்டு வீச்சு !!

நிஜ சம்பவங்களின் நிழலாக அமைந்து உலக மக்களிடையே பெரும் கொதிப்பையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்திய புகைப்படம்

இரண்டாம் உலகப்போரில் அமெரிக்காவால் ஜப்பான் மீது வீசப்பட்ட அணுக்குண்டே உலகில் அணுக்குண்டால் ஏற்பட்ட முதல் தாக்கம். அந்த அணுவின் விஷம் அம்மக்களை பலவாறு பாதித்தது. கருவை அழித்தது, ஊனமாக பிறக்க வைத்தது, தோலை கருக்கியது, கதிர்வீச்சு நோய்களை உண்டாக்கியது. இந்த அணுக்குண்டு வீசப்பட்ட காட்சி ஒவ்வொரு ஜப்பானியன் நெஞ்சிலும் இடம் பெற்றிருக்கும். அணுக்குண்டு என்றுமே ஆபத்தானது என்பதை இப்புகைப்படம் தன்னுள் எப்போதும் புதைத்திருக்கும்.

காளான் மேகம்

இரண்டாம் உலகப்போரின் இறுதி கட்டத்தில் 1945 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஆறாம் தேதி அது நிகழ்ந்தது. உலகம் அதுவரை கண்டிராத அரக்கன் ஒருவன் உலகத்தாருக்கு அறிமுகமானான். அவனுக்குப் ‘சிறிய பையன்’(Little Boy) என்று பெயர் சூட்டப்பட்டிருந்தாலும், உண்மையில் அவன் ஒரு பெரும் அரக்கன். கணநேரத்தில் பல்லாயிரக்கணக்கானவர்களைக் கொன்று குவித்த அரக்கன் . உலகம் இன்றுவரை அவனை நினைவில் வைத்திருக்கிறது. அவன் வேறு யாருமல்ல, அணுகுண்டு என்னும் பேரரக்கன் தான் அவன்.

வட அமெரிக்கா தன் கொடுரத்தன்மையின் மற்றொரு முகத்தை அன்று வெளிக்காட்டியது. ஜப்பானிய நகரமான ஹிரோஷிமாவின் மீது முதல் அணுகுண்டை வீசியது. குண்டு விழுந்த அடுத்த நொடியில் எழுவதாயிரத்திலிருந்து என்பதாயிரம் மக்கள் தீயில் கருகி மாண்டுப் போனார்கள். அதாவது அந்நகரத்தின் முப்பது சதவிதம் மக்கள் நொடியில் சாம்பலானார்கள். மேலும் எழுபதாயிரம் மக்கள் படுகாயம் அடைந்தனர். அதன்பின் 90,000 முதல் 1,66,000 மக்கள் வரை குண்டு வெடிப்பின் பின் விளைவுகளால், அதாவது தீக்காயம், கதிரியக்க பாதிப்பு போன்றவற்றால் இறந்துப் போனார்கள். 1950 வரை கிட்டத்தட்ட இரண்டு லட்சம் மக்கள் இறந்துபோனார்கள் என்ற கணக்கும் இருக்கிறது. மேலும் 1950-இல் இருந்து 2000ஆம் ஆண்டுக்குள், அந்த குண்டு வெடிப்பில் தப்பிப் பிழைத்தவர்களில் 46 சதவிதம் பேர் கதிரியக்கத்தால் உண்டான நோயினாலும், 11 சதவிதம் பேர் புற்று நோயினாலும் மாண்டுப்போனார்கள்.

அணுவால் வந்த அழிவு

ஹிரோஷிமாவின் மீது அணுகுண்டுப் போட்ட மூன்றாம் நாள், அதாவது ஆகஸ்டு 9, 1945 ஆம் ஆண்டு ஜப்பானின் நகரமான ‘நாகசாகி’ மீது வட அமெரிக்கா மற்றொரு அணுகுண்டைப் போட்டது. ‘கொழுப்பு மனிதன்’ அல்லது ‘குண்டு மனிதன்’(Fat man) என்று பெயரிடப்பட்ட அந்தக் குண்டு நாகசாகி மீது விழுந்த கணம், நாற்பதாயிரத்திலிருந்து எழுபதாயிரம் மக்கள் சாம்பலாகிப்போனார்கள். 1945-இன் இறுதிவரை என்பதாயிரம் பேர் இறந்துப் போனார்கள்.

இரண்டு அணுகுண்டுகளும், அது போடப்பட்ட மைத்திலிருந்து பல மையில்களுக்கு தன் பாதிப்புகளை ஏற்படுத்தியன. குண்டு விழுந்த அடுத்தக் கணம் ஒன்றிலிருந்து மூன்று மையில்களுக்கு இடைப்பட்ட கட்டிடங்கள் அனைத்தும் தரை மட்டமாயின. பல மையில் தூரம் பரவிய தீ மீதமிருந்ததை எல்லாம் சாம்பலாக்கியது. தொன்னூறு சதவித நகரம் நொடியில் தரைமட்டமானது. அணுகுண்டு வெடிக்கும் போது உருவாகும் புகை மூட்டத்திற்கு ‘காளான் மேகம்’(Mushroom Cloud) என்றுப் பெயராம்.

நாகசாகி அணுகுண்டுக்கு முன் – பின்

அதுநாள் வரை உலகம் அப்படியான ஒரு பேரழிவை பார்த்ததில்லை. அதுவும் ஒரே ஒரு வெடிகுண்டால் இப்படியான அழிவை ஏற்படுத்த முடியும் என்பது பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. இத்தகைய ஒரு பேரழிவு ஆயுதத்தை உருவாக்கவும் அதை மற்றவன் மீது பிரயோகிக்கவும் முடியும் என்பது உலகம் கண்டு கொண்டு பெரும் அதிர்ச்சிகளில் ஒன்று.

இரண்டாம் உலகப்போர் துவங்குவதற்கு சிறிது காலம் முன்பாக ஆகஸ்டு 2, 1939 ஆம் ஆண்டு ‘ஆல்பட் ஐன்ஸ்டீன்’ அப்போதைய வட அமெரிக்க அதிபர் ‘பிராங்களின் ரூஸ்வெல்ட்க்கு’ ஒரு கடிதம் எழுதினார். அதில், ஜெர்மனியர்கள் ‘யுரோனியம்-235’ என்னும் தனிமத்தை சுத்திகரிக்கிறார்கள் அதன் மூலம் அணுகுண்டு செய்ய முடியும் என்பதை குறிப்பிட்டிருந்தார். அதன்பிறகே வட அமெரிக்கா அணுகுண்டு தயாரிப்பைப் பற்றி சிந்திக்கத் துவங்கியது. ஜெர்மனியர்கள் அணுகுண்டை தயாரித்து பயன்படுத்திவிடக் கூடாதே என்ற பயம் அவர்களை ஆட்டிப்படைக்கத் துவங்கியது . தாங்கள் முந்திக்கொள்ள வேண்டும் என்ற உந்துதலும் அவர்களுக்கு ஏற்பட்டது.

இதன் தொடர்ச்சியாக ‘மேன்ஹாட்டன் புராஜக்ட்’(“The Manhattan Project”) என்ற பெயரில் அணுகுண்டு தயாரிப்புச் சார்ந்த பனிகள் துவங்கப்பட்டன. பல கட்டங்கள் தாண்டி அணுகுண்டு உருவாக்கப்பட்டது. பின்பு ஜூலை 16, 1945 ஆம் ஆண்டு மெக்சிகோவின் வட பகுதியில் அமைந்த ‘ஜெமிஸ் மலைப்பகுதியில்’(Jemez Mountains) ‘The Gadget’ என்றுப் பெயரிடப்பட்ட முதல் சோதனை அணுகுண்டு பரிசோதிக்கப்பட்டது. அது ஏற்படுத்திய அழிவு வட அமெரிக்கர்களை உற்சாகப்படுத்தியது.

ஹிரோஷிமா அணுகுண்டுக்கு முன்-பின்

ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது அணுகுண்டைப் போட்டதற்கு வட அமெரிக்கா சொல்லும் காரணம், ஜப்பான் சரண் அடையவேண்டும் அதன் மூலம் இரண்டாம் உலகப் போரை முடிவுக்கு கொண்டுவருவதும் ஆகும். ஆனால், அப்போதைய காலகட்டத்தில் ஜப்பான் சரண் அடையும் நிலையில்தான் இருந்தது. ஏனெனில் இரண்டாம் உலகப்போர் அப்போது அதன் இறுதி நிலையை அடைந்திருந்தது. பெரும்பாலான தேசங்கள் தோல்வியை தழுவி இருந்தன. இரண்டாம் உலகப் போரின் மூல கர்த்தாவான இட்லர் இறந்துப் போய்விட்டார், இத்தாலியின் முசோலனி அவரின் மக்களாலையே கொல்லப்பட்டுவிட்டார். மேலும் மே 7, 1945-இல் ஜெர்மன் நேச நாட்டு படையிடம் சரண் அடைந்திருந்தது.

அப்போதைக்கு ஜப்பானும் பெருத்த சேதம் அடைந்திருந்தது. எந்நேரத்திலும் அது சரண் அடைவதற்கான முகாந்திரம் இருந்தது. போர் நிறுத்த ஒப்பந்தங்களில் கையொப்பமிட ஜப்பானும் தயாராகத்தான் இருந்தது, சில கட்டுப்பாடுகளில் மட்டுமே முரண் பட்டிருந்தது. விரைவில் ஜப்பான் சரண் அடைந்து விடும், போரும் முடிவுக்கு வந்துவிடும் என்ற சூழல்தான் அப்போது நிலவியது. எனில் அணுகுண்டுப் போட்டுத்தான் ஜப்பானை வழிக்கு கொண்டு வர வேண்டிய தேவையே அப்போது இல்லை.

ஹிரோஷிமா மற்றும் நாகசாகியின் காளான் மேகங்கள்

இந்நிலையில் வட அமெரிக்கா அணுகுண்டை பயன்படுத்தக் காரணம் என்ன? வேறு என்னவாக இருந்துவிட முடியும்..ஒரு வார்த்தையில் சொல்லவதானால்..திமிறு அல்லது அயோக்கியத்தனம் என்றுதான் சொல்ல வேண்டும்.

அப்போதைய மதிப்பில் இரண்டு பில்லியன் டாலர்(தற்போதைய மதிப்பில் 26 பில்லியன் டாலர்) செலவுச் செய்து உருவாக்கிய அணுகுண்டை எப்படி பயன்படுத்தாமல் இருக்க முடியும். மேலும் அவ்வளவு செலவுச் செய்து தயாரித்த குண்டின் பயன் என்ன என்று மக்களுக்கு காட்டாவிட்டால் பின்பு எப்படி அத்திட்டத்தை தொடர்வது, அதற்கானப் பணத்தை மக்களின் வரிப்பணத்திலிருந்து எப்படி எடுக்க முடியும்? போன்ற கேள்விகள் ரூஸ்வெல்டின் முன் வைக்கப்பட்டிருக்கிறது. இவ்வளவு பணம் பிடித்த திட்டத்தின் பயனை மக்களுக்கு காட்டாவிட்டால், அது பல அரசியல் பிரச்சனைகளை உங்களுக்கு கொண்டு வரும் என ரூஸ்வெல்ட் எச்சரிக்கப்பட்டிருக்கிறார்.

அதுவும் இல்லாமல், வட அமெரிக்கர்கள் இரண்டு வகையான அணுகுண்டு தயாரிப்பு முறைகளைப் பின்பற்றி இருந்தனர். ஒன்று ‘யுரேனியம்’ மூலமாகவும் மற்றொன்று ‘புலுட்டோனியம்’ மூலமாகவும் பெறப்படுவது. இவை இரண்டில் எது சக்தி வாய்ந்தது என்று தெரிந்துக் கொள்வது அவசியமாகிருந்தது.

சிறிய பையன்

‘கொழுப்பு மனிதன்’ அல்லது ‘குண்டு மனிதன்’

இந்நிலையில், இரண்டாம் உலகப்போரின் முடிவுக்குள்ளாக அவற்றைப் பரிசோதித்துப் பார்த்துவிட முயன்றனர். அதன் தொடர்ச்சியாக ஜப்பானின் ஹிரோஷிமா நகரம் தேர்ந்தெடுக்கப்பட்டது. காரணம் அந்நகரம் இதுநாள் வரை போரினால் பாதிக்கப்படாமல் இருந்தது. ஆகவே, இப்போது போடப்படும் அணுகுண்டின் முழுபலன் என்னவென்று தெரிந்துக் கொள்ள முடியும். மேலும் அந்நகரில் படைத்துறையின் பிரிவுகள் இருந்ததும் அது ஒரு முக்கிய இராணுவ கேந்தரமாக இருந்தது என்பதும் உப காரணங்கள் தான். வட அமெரிக்கர்களுக்கு அப்போதைய தேவை, போரினால் பாதிக்கப்படாத ஒரு முழுமையான நகரம். அது ஹிரோஷிமாவாக இருந்தது, அந்நகரத்தாரின் கெட்டநேரம். இந்நகரத்தின் மீது ‘யுரேனியம்’ அணுகுண்டு போடப்பட்டது.

பிறகு முன்று நாட்கள் கழித்து, இரண்டாம் வகை அணுகுண்டான ‘புலுட்டோனியம்’ குண்டு பரிசோதிக்க முடிவு செய்யப்பட்டது. இம்முறை அவர்கள் தேர்த்தெடுத்தது ‘கொகுரா’(Kokura) என்னும் நகரம்தான். நாகசாகி மாற்று இலக்காகத்தான் இருந்தது. கொகுராவின் மீது அணுகுண்டு விமானம் பறந்த போது அந்நகரம் மேகமூட்டங்களால் சூழப்பட்டிருந்தது. அதன் காரணமாக அடுத்த இலக்கான ‘நாகசாகி’ அணுகுண்டுக்கு இலக்காகியது.

ஜப்பானை பயமுறுத்தி சரண் அடையவைப்பது என்பது மட்டும்தான் நோக்கம் என்றால் முதல் அணுகுண்டு மட்டுமே போதுமானது. ஹிரோஷிமாவின் மீது நடத்தப்பட்ட தாக்குதலிலேயே ஜப்பான் பெரும் அதிர்ச்சிக்குப்போனது, இந்நிலையில் இரண்டாவது தாக்குதல் தேவையற்றது. ஆனாலும் வட அமெரிக்கா இந்த இரண்டாவது தாக்குதலை நடத்தக் காரணம் என்ன?

அதற்குக் காரணம் வட அமெரிக்கா தன் கண்டுபிடிப்பை பரிசோதித்துப் பார்ப்பது என்றாலும், வேறொரு காரணமும் இருந்தது. அப்போது பலம் பொருந்திய தேசமாக முன்னின்ற சோவியத் யூனியனையும் மிரட்டி வைக்க வட அமெரிக்கா நினைத்தது. தன்னிடம் பல அணுகுண்டுகள் உள்ளன, தேவைப்பட்டால் அதை உபயோகிப்போம் என சோவியத் யூனியனுக்கு சொல்லாமல் சொல்லியது. தங்களின் வல்லரசு போட்டியில் வெல்ல அன்று வட அமெரிக்கா தயங்காமல் இக்காரியத்தை செய்தது.இதுவே பணிப்போருக்கான அடித்தளமானது.

இதன் தொடர்ச்சியாக ஆகஸ்டு 15, நாகசாகியில் குண்டு போடப்பட்ட ஆறு நாட்களுக்குப் பிறகு ஜப்பான் சரண் அடைவதாக அறிவித்தது. செப்டம்பர் 2, 1945 சரண் அடைவதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டது. இதனால் இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது.

அன்று வட அமெரிக்கா அறிமுகப்படுத்திய அரக்கன் இன்று உலக முழுவதும் பரவி உலகை அச்சுறுத்திக் கொண்டுள்ளான். வல்லரசு என தன்னைக் காட்டிக் கொள்ளவும் உலகத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் முயலும் தேசங்கள் இன்று இவ்வரக்கனின் உதவியையே நாடி இருக்கின்றன. மறுபுறம் தற்காப்பு என்று காரணம் காட்டி சுண்டக்காய் தேசங்களெல்லாம் அணுகுண்டைத் தயாரிக்கின்றன.
ஒருபுறம் உலகச் சமாதானம், உலக அமைதி என கூவலிடும் தேசங்கள் மறுபுறம் உலக மானுடர்களை நொடியில் சாம்பலாக்கும் அணுகுண்டை தயாரிக்கின்றன. இதன் பொருட்டே தேசங்கள் தோரும் அணு உலைகள் கட்டப்படுகின்றன. மின்சார உற்பத்தி என்ற போலிக்காரணம் காட்டப்பட்டாலும் அதன் மறைமுக நோக்கம் அணுகுண்டு தயாரிப்பதுதான்.

இந்தியாவைப் பொருத்தவரை அதன் மொத்த மின்சார உற்பத்தியில் 2.7% மின்சாரமே அணு உலைகளால் தயாரிக்கப்படுகிறதாம். அத்தகைய குறைந்த அளவு மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்ய முடிகிற அணு உலைகளின் தேவை என்ன? இதை ஏன் நாம் மற்ற வழிகளில் தயாரிக்கப்படும் மின்சாரம் மூலம் நிவர்த்தி செய்துக் கொள்ள கூடாது? ஆபத்தான அணு உலைகள் தான் வேண்டும் என அரசுகள் முரண்டுப் பிடிப்பதன் உள்நோக்கம் என்ன?

அது ஒன்று மட்டுமாகத்தான் இருக்க முடியும். அது அணு மின்சாரம் என்ற போர்வையில் அணுகுண்டு தயாரிப்பது. அதற்காகவே இத்தேசத்தின் அரசு அப்பாவி மக்களின் உயிர்களோடு விளையாட துணிகிறது. வல்லரசுகளோடு அது போட்டுக்கொண்ட ஒப்பந்தங்களும் பெற்றுக் கொண்ட கையூட்டுகளும் அத்தகைய சூழ்நிலைகளை உருவாக்குகிறது.

ஒவ்வொரு அணு உலையும் பல அணுகுண்டுகளுக்குச் சமம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். கட்டப்படும் ஒவ்வொரு அணு உலையும் நமக்கான படுகுழிகள் என்பதை மறந்துவிடக்கூடாது.

மானுடத்தின் எதிர்காலம் அணு என்னும் அரக்கனின் அழிவில்தான் இருக்கிறது என்பதை நினைவில் கொள்வோம்.