Saturday, December 8, 2012

பேஸ்புக் 3


மிக முக்கியமான கண்டுபிடிப்புகளை உற்பத்தி செய்யும் அமெரிக்காவின் நியூயார்க் நகரில், டாஸ்பெர்ரி என்னும் இடத்தில், எட்வர்ட் மற்றும் கேரன் தம்பதியினருக்கு இரண்டாவது குழந்தையாகப் மே 14 1984 அன்று பிறந்தவர் மார்க் ஜக்கர்பெர்க். "கோழைகளின் பல்மருத்துவர்" என்று தன்னை அறிமுகம் செய்து கொள்ளும் வேடிக்கை மனிதர், மார்க்கின் தந்தை மிஸ்டர் எட்வர்ட் ஜக்கர்பெர்க் . தனது உளவியல் தொழிலை குடும்ப மற்றும் குழந்தைகளின் நலன் கருதி தியாகம் செய்தவர் மார்க்கின் தாய் கேரன். சமுக மாற்றம் கொண்டு வந்த அற்புதக் குழந்தையின் பெற்றோருக்கு மொத்தம் நான்கு குழந்தைகள். ராண்டி, டோனா, ஏரியலி என்ற மூன்று பெண் குழந்தைகளுக்கு மத்தியில் பிறந்த ஒரே ஒரு ஆண் குழந்தை மார்க்.ஜக்கர்பெர்க். இரே ஆண் குழந்தை என்பதால் மார்க் இளவரசனாகவே வளர்க்கப்பட்டான். மூன்று சகோதரிகளுக்கும் மார்க் என்றால் அவ்வளவு இஷ்டம். தனது சகோதரிகளுடன் சேர்ந்து சேட்டைகள் செய்வது என்றால் மார்கிற்கோ அலாதி ஆர்வம்.

"அப்பன் எட்டடி பாய்ந்தால் மகன் பதினாறு அடி பாய்வான்" என்பது பழமொழி. எட்டடி பாயும் அப்பாவான எட்வர்ட் பற்றி பார்த்துவிட்டு மார்க்கின் வாழ்க்கைக்குள் நுழைந்தால் சுவாரசியம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். 


அஞ்சல் துறையில் வேலை பார்க்கும் அப்பா, குடும்பத் தலைவி அம்மா என்ற நடுத்தரவர்க்கக் குடும்பத்தில் பிறந்தவர் எட்வர்ட் ஜக்கர்பெர்க். எட்வர்ட் இருந்த ஏரியாவில் முதன்முதலில் கலர் டிவி வாங்கியது எட்வர்டின் குடும்பமே. தொலைகாட்சி வந்ததாலோ என்னவோ அவர்கள் வீட்டில் இருந்த ரேடியோ மூலைக்குள் முடங்க ஆரம்பித்தது, மூலைக்குள் முடங்கிய அந்த ரேடியோவை பிரித்து மேய்ந்ததில் இருந்து ஆரம்பித்தது எட்வர்டுக்கும் எந்திரங்களின் மீதான காதலும். அந்தச் சிறுவயதில் தனக்கிருந்த அரைகுறை அறிவை வைத்துக் கொண்டு கையில் கிடைக்கும் எந்திரங்களை எல்லாம் பிரித்து மேய்ந்து கொண்டிருப்பார். எந்திரங்களுக்கும் உணர்வு உண்டு என்று பரிபூரணமாக நம்புவார் இன்றும் நம்புகிறார். நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவற்றுடன் பேசிக் கொண்டிருப்பார். 

எட்வர்டின் பதின்ம வயதும் கணினி யுகத்தின் அதிதீத வளர்ச்சியும் ஒன்றாகவே இருந்தது. அறை முழுவதையும் அடைத்துக் கொண்டு பிரமாண்டமாய் இருக்கும் கணினிகளின் மீது எட்வர்டிற்கு சிறுவயது முதலே தனிபிரியம் உண்டு. ஆனால் எட்வர்டின் அப்பாவிற்க்கோ அவரை ஒரு மருத்துவராக பார்க்க வேண்டும் என்று ஆசை. முட்டாள்களின் மூலதனம் கணினி என்பது எட்வர்ட் அப்பாவின் வாதம். எட்வர்ட் பல்மருத்துவம் பயின்று மருத்துவர் ஆன பின்பும் அவருக்கு கணினிகளின் மீது இருந்த ஆர்வம் தனியவே இல்லை. முழுமையாக கணினி மயமாக்கபட்ட முதல் பல் மருத்துவமனை எட்வர்ட் ஜக்கர்பெர்க் உடையது, என்பது இங்கே கூடுதல் தகவல். அவரது மருத்துவமனை வீடு என்று எங்கும் கணினி மயம். கணினி மயமாக்கபட்ட மருத்துவமனை, வலி தெரியாமல் பல்லை கழற்றி எடுக்கும் வேடிக்கை மருத்துவர் என்று எட்வர்ட் அந்தப் பகுதி முழுவதுமே மிகவும் பிரபலம். மக்கள் அவரை செல்லமாக அழைப்பது கோழைகளின் மருத்துவர் டாக்டர் இசட்.

எட்வர்ட் வேறு வழி இல்லாமல் மருத்துவம் பயின்றாலும் பொழுதுபோக்காக கணினியும் பயின்றார். அன்றைய காலகட்டத்தில் பிரபலமாக இருந்த கணினி மொழி அட்டாரி பேஸிக் (இன்று சி++ ஜாவா போல). எட்வர்ட் நேரம் கிடக்கும் போதெல்லாம் அட்டாரி பயின்றார். IBM தனது கணினிகளை பொதுமக்கள் பயன்பாடிற்கு கொண்டு வந்திருந்த நேரம் மிக லேட்டஸ்ட்டான IBM கணினியை வாங்கி தனது வீட்டில் நிறுவி இருந்தார் எட்வர்ட். அவர் எதிர்பார்த்தது போல் அந்த கணினி இயங்க வில்லை. மெமரி மற்றும் செயல்திறன் எதுவுமே அவர் எதிர்பார்த்தது போல் அமையவில்லை. பல குறைகள் இருந்தது. தனது முதல் கணினி அவருக்குக் கற்றுக் கொடுத்த பாடமாக எட்வர்ட் இவ்வாறு குறிபிடுகிறார் " ஒரு கணினி எப்படி எல்லாம் இருக்கக் கூடாது என்பதையும் எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்பதையும் என் கணினி எனக்குக் கற்றுக் கொடுத்துவிட்டது, இது மிகச் சிறந்த பாடம் எனக்கு".

1979 ம் வருடம் உளவியல் படிப்பு படித்துகொண்டிருந்த கேரனை காதல் திருமணம் செய்து கொண்டார் எட்வர்ட். இவர்களது முதல் குழந்தை ராண்டி, இரண்டாவது மார்க் மூன்றாவது டோனா குழந்தை வீட்டின் கடைசிக் குழந்தை ஏரியலி. இவர்களது நான்கு குழந்தைகளுமே மிகவும் புத்திசாலிகள் அதே நேரத்தில் சேட்டைகளும் மிக அதிகம். மார்க் தனது அக்கா ராண்டியுடன் சேர்ந்து செய்த குறும்புத் தனங்களில் இன்றளவும் மறக்க முடியாத நிகழ்வு என்று மார்க் குறிப்பிடுவது ப்ராப்ளம் Y2K.


ப்ராப்ளம் Y2K என்பது 1999 ம ஆண்டு டிசம்பரில் கணினி உலகம் சந்தித்த மிகப் பெரிய பிரச்னை. அதாவது கணினியில் தேதியை MM-DD-YY என்று குறிப்பது வழக்கம். 1999 என்பதை சுருக்கமாக 99 என்று குறிப்பது வழக்கம். 1999 ற்கு அடுத்த வருடம் 2000 இதனை கணினி 00 என்று கொள்ளும். குழப்பம் ஆரம்பித்தது இங்கே தான். 00 என்பதை கணினி 2000 என்று எடுத்துக் கொள்ளுமா அல்லது 1900 என்று எடுத்து கொள்ளுமா என்பதை யாராலும் தெளிவு படுத்த இயலவில்லை. உலகமே தலையை பிய்த்துக் கொண்டிருந்தது. ஒருவேளை 1900 என்று எடுத்துக் கொண்டால் மொத்த கணினி செயல்பாடும் வங்கி தொழில் பர்வர்த்தனைகளும் முடங்கிவிடும். கணினிமயமாகப்பட்ட துறைகள் பெரிதும் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருந்தும் Y2K மிகப் பெரும் விளைவுகளை ஏற்படுத்தவில்லை. அதே நேரத்தில் கணினி உலகமும் சுதாகரித்துக் கொண்டது. தற்பொழுது வருடம் YYYY என்று குறிப்பிடப்படுவதற்கான காரணம் Y2K கொடுத்த எச்சரிக்கை தான். 

ப்ராப்ளம் Y2Kவிற்கும் மார்கிர்க்கும் என்ன சமந்தம் என்று கேட்கிறீகளா, மார்க் Y2Kவில் புரட்சி எதையும் உண்டு பண்ணவில்லை தனது குடும்பத்தில் மிரட்சியைத்தான் உண்டு பண்ணினான். 2000 வருடம் பிறக்கும் புத்தாண்டு தினத்தன்று சரியாக பனிரெண்டு மணியளவில் தனது வீட்டில் இருக்கும் தனது சகோதரி ராண்டியுடன் சேர்த்து தடை செய்துவிட்டு Y2K பிரச்னை காரணமாகத் தான் மின்சாரம் செயல் இழந்துவிட்டது, இனி மின்சாரமே வராது என்று தனது குடும்பத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருகிறார். நமக்கு இன்று மிக சாதாரணமாக தெரியும் இந்த விஷயம் அன்று மிகப் பெரிய பீதியை ஏற்படுத்திய ஒன்று என்பதே இங்கு கவனிக்கப்பட வேண்டிய விஷயம். 

சிறுவயது முதலே மார்க்கிற்கு கணினி மீது அலாதி ஆர்வம் அதற்க்கு மிக முக்கிய காரணம் அவரது தந்தை எட்வர்ட் ஜக்கர்பெர்க் தான். அன்றைய காலகட்டத்தில் கணினி என்பதே அபூர்வமான விசயமாக இருந்த நேரத்தில் எட்வர்டோ தனது அலுவலகம் குடும்பம் என்று எங்கும் கணினியால் நிரப்பி வைத்திருந்தார். இதில் ஆச்சரியமான விஷயம் மார்க் விளையாட்டுப் பொருளாக தனக்கு கணினி வேண்டும் என்று அடம்பிடிக்க எட்வர்டும் வாங்கிக் கொடுத்துவிட்டார். தனது மகனுக்கு கணினி மீது இருந்த ஆர்வத்தை எட்வர்ட் சரியான நேரத்தில் கணிக்க தவறியிருந்தால் பேஸ்புக் யுகத்தை நாம் இழந்திருப்போம். 



"
மார்க் உனக்கு வாங்கித் தந்த கம்ப்யூட்டர் எவ்ளோ தூசி அடைஞ்சு போய் இருக்குன்னு பாரு, இப்போ எல்லாம் நீ உன் கம்ப்யூட்டர் பக்கமே போறது இல்ல" எட்வர்ட் மார்கிடம் கடிந்து கொண்டார்.

"போங்கப்பா, இந்த கம்ப்யுட்டர் ரொம்ப போர், நா நினச்ச மாதிரி இது வேல செய்ய மாட்டேங்குது, என்னால இது கூட உருப்படியா எதுவும் விளையாட முடியாது, எனக்கு இது வேணாம், நான் விளையாட போறேன், டாட்டா", பதின்ம வயது சிறுவனுக்கு கம்ப்யூட்டர் போர் அடித்துவிட்டது, பாவம் அவன் என்ன செய்வான், கம்ப்யுட்டரை விளையாட்டுப் பொருளாக மட்டும் பார்த்த மார்க்கிற்கு முறையாக அதை உபயோகப் படுத்தத் தெரியாததால், கணிணியையே வெறுத்துவிட்டான், அதன் வெளிபாடு தான் மார்க்கின் இந்த வார்த்தைகள் "என்னால இது கூட உருப்படியா எதுவும் விளையாட முடியாது"

கணிணியைக் கொண்டு உருப்படியாக எதுவும் செய்ய முடியாது என்ற மார்க்கின் வார்த்தைகளை எட்வர்ட் சிறிதும் எதிர்பார்த்திருக்வில்லை. மார்க்கையே சிறிது நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார், சிறுவனோ விளையாட வேண்டிய அவசரத்தில் இருந்தான்.,
   
"மார்க் கணினியுடன் உனக்கு பேசத் தெரியுமா? கணினியை உனது தோழனாக்கிக் கொள்ள விருப்பமா? நான் சொல்கிறபடி கேட்டாய் என்றால், நீ சொல்கிற படியெல்லாம் உனது கணினி கேட்கும் , சம்மதமா உனக்கு? உனக்கு சம்மதம் என்றால் கணினியுடன் பேசும் அந்த  அற்புத மொழியை நான் உனக்குக் கற்றுத் தருகிறேன்".

"கணினியுடன் பேசும்  அற்புத மொழி" இந்த வார்த்தைகள் மார்க்கை நிச்சயம் கவர்ந்திருக்க வேண்டும், தன் சிறிய விழிகளை அகல விரித்து "கணினியுடன் என்னால் பேச முடியுமா? நான் சொல்வதை எல்லாம் கணினி கேட்குமா? கணினியால் என்னுடைய தோழன் ஆக முடியுமா?" மார்க் தன் பங்கிற்கு கேள்விகளை அடுக்கினான், மீண்டும் ஒரு விஷயத்தை இங்கு நினைவுபடுத்துகிறேன், நீங்கள் கூறும் ஒரு விசயத்தை மார்க் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றால், மார்க் கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்லத் உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும், இல்லை என்றால் மார்க் சொல்வதை நீங்கள் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்.


எட்வர்ட் இந்த விசயத்தில் மார்க்கை வென்றுவிட்டார். தனது குழந்தைக்கு கணினி குறித்த வகுப்பு எடுக்க தயாரானார். உலகையே தன் வலைப்பக்கத்தின்  முன்னால் உட்கார வைத்திருக்கும் மார்க்கின் முதல் கம்ப்யூட்டர் குரு அவரது தந்தை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. எட்வர்ட் தனது ஓய்வு நேரங்களில் தான் படித்த அட்டாரி பேசிக்கை மார்கிற்குக் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார். அட்டரியின் நீலத்திரை மார்க்கை பெரிதும் கவர்ந்துவிட்டது. (உங்களிடம் ஒரு கேள்வி! அட்டாரியின் நீலத் திரைக்கும், பேஸ்புக்கின் நீலத் திரைக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா?) வெகு விரைவாக, வெகு எளிதாக அட்டாரி 800 மொழியை கற்றுக்கொண்டார் மார்க், ஒரு கட்டத்தில் அட்டாரியில் தனது தந்தையை மிஞ்சி விட்டார். எட்வர்ட் கணினி வல்லுனரோ மேதாவியோ இல்லை. கிளினிக்கில் தனக்கு கிடைத்த ஓய்வு நேரத்தில் கணினி கற்றவர் தான் எட்வர்ட்.  

ஆனால் மார்க்கோ பத்து கி.மீட்டர் வேகத்தில் ஓடக் கற்றுக் கொடுத்தால் நூறு கி.மீட்டர் வேகத்தில் ஓடும் பிள்ளை. அட்டாரியை கற்றுக் கொண்டதும் மார்க் கூறிய பதில் "இவ்வளவு தானா இதைத் தான் அற்புத மொழி என்றீர்களா? நான் என்னவோ நினைத்து விட்டேன், சரி நான் விளையாடக் கிளம்பலாமா?". மார்க்கின் வேகத்திற்கு எட்வர்டால் ஓட முடியவில்லை, ஒன்றை நன்றாகப் புரிந்து கொண்டார், மார்க் எளிதில் கணினி கற்றுக் கொள்கிறான், அந்த ஆர்வத்தை இன்னும் மெருகேற்ற வேண்டும். 

சி++ பார் டம்மீஸ் என்ற புத்தகத்தை கொடுத்து படிக்கச் சொன்னார். உபரி தகவல் : பார் டம்மீஸ் என்ற தலைப்பில் இதுவரை 2300 புத்தகங்கள் வெளிவந்த்ருகின்றன, அதில் பேஸ்புக் பார் டம்மீஸ் என்ற புத்தகமும் அடக்கம். குழந்தைப் பருவத்தில் பார் டம்மீஸ் புத்தகத்தை வழிகாட்டியாகக் கொண்டவருக்கு, அதே புத்தகத்தில் தானும் ஒரு வழிகாட்டியாய் மாறுவோம் என்பதை மார்க் சற்றும் எத்ரிபார்த்திறுக்க மாட்டார்.  

அட்டாரியை விட சி++ கொஞ்சம் பெரிய மொழி, இருந்தும் மார்க் அதையும் ஆர்வத்துடன் கற்றுக் கொள்ள ஆரம்பித்தார். இங்கே மற்றும் ஒரு சிக்கல் ஆரம்பித்தது. கணினி வாங்கிக் கொடுத்தாயிற்று,புத்தகம் வாங்கிக் கொடுத்தாயிற்று, சரி குரு எங்கே? மார்க்கிற்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு விளக்கம் கொடுப்பது யார்? 1+1 என்று கணக்கு எழுத மார்க் சாதாரண சிறுவனா. எட்வர்டால் மார்க்கை சமாளிக்க முடியவில்லை, அவனது சந்தேகங்கள் அனைத்தும் வித்தியாசமானதாய் மிகப் பெரியதாய் இருந்தது. தேர்ந்த குரு ஒருவரின் துணை இல்லாவிட்டால் மார்க் நம்மை சும்மா விடமாட்டான் என்பதை எட்வர்ட் புரிந்துகொண்டார்.

டேவிட் நியூமன் மார்க்கின் புதிய குரு. புதிய ஓட்டம் ஆரம்பித்தது. நியூமண் கொஞ்சம் விஷயம் தெரிந்த்தவர், அவரிடம் இருந்து இன்னும் பல புதிய விசயங்களை, புதிய வழிமுறைகளை மார்க் கற்றுக் கொண்டான், மார்க்கின் வேகத்திற்கு நியூமனால் ஓட முடியவில்லை, ஓட்டத்தில் அவரையும் பின்னுக்கு தள்ளிவிட்டான், இத்தனைக்கும் டேவிட் நியூமன் மார்க்கிற்கு வகுப்பு எடுத்தது வாரத்திற்கு ஒருநாளே. "கணினி சார்ந்த நுட்பங்களில் தேர்ச்சி பெறுவதில் மார்க் ஒரு அற்புதக் குழந்தை, அவனுக்குக் கற்றுக் கொடுக்க என்னிடம் வேறு வித்தை இல்லை, அவன் என்னை முந்திச் சென்றுவிட்டான். டேவிட்டின் இந்த வார்த்தைகள் மார்க்கின் வாழ்க்கை ஓட்டத்தில் குறிப்பிடத்தக்க ஒன்று.

மார்க் தான் கற்றுக் கொண்டதை கொண்டு என்ன செய்தான், எப்படி பரிசோதனைகள் செய்து பார்த்தான் என்று நமக்கெல்லாம் ஒரு சந்தேகம் இருக்கலாம் இல்லையா, விளையாட்டுப் பிள்ளைக்கு விளையாட்டைத் தவிர வேறு என்ன தெரியும், அந்த வயதிலேயே கம்ப்யூட்டர் கேம்சிற்கு ப்ரோக்ரம் எழுதத் தொடங்கினார் மார்க். மார்க்கின் வகுப்புத் தோழர்களில் சிலருக்கு ஓவியம் வரைவதில் ஆர்வம் அதிகம், அவர்கள் வரைந்து தரும் அந்த ஓவியகளை கணினியில் ஏற்றி அவற்றைக் கொண்டு கம்ப்யூட்டர் கேம்ஸ் எழுதுவதில் மார்க்கிற்கு அலாதி ஆர்வம்.


தான் கற்றவைகளை மார்க் இப்படித் தான் பரிசோதித்துப் பார்த்தார், மார்க்கிற்கு மிகவும் பிடித்த திரைப்படம் ஸ்டார் வார்ஸ், அதில் வரும் காட்சியமைப்புகளைக் கொண்டும் கேம்ஸ் எழுதியுள்ளார். தனது கடந்த கால நினைவுகளைப் பற்றி குறிப்பிடும் பொழுது மார்க் இந்த சம்பவங்களைப் பற்றி குறிப்பிட தவறுவதே இல்லை. 


"டாக்டர் இசட், பேஷன்ட் வந்த்ருகாறு உடனே வாங்க", எட்வர்ட் ஷக்கர்பெர்க் ரிசப்ஷனிஸ்டின் இந்த அலறல் டாஸ்பெரி நகரம் முழுவதும் எதிரொலிக்கும். எட்வர்ட்டிற்கு இது கொஞ்சம் கவுரவக் குறைச்சல் போல் தோன்றியது.

என்ன தான் டாஸ்பெரி நகரின் மிகப் பெரிய பல் மருத்துவர் என்றாலும் எட்வர்டிடம் அலைமோதும் அளவிற்கு எல்லாம் கூட்டம் வருவது கிடையாது. அவரது இல்லமும் கிளினிக்கும் ஒட்டினார்போல் இருக்கும். பேஷன்ட் யாரும் இல்லை என்றால் வீட்டிற்கு சென்று தனது கணினியை நோண்ட ஆரம்பித்து விடுவார். "டாக்டர் இசட், பேஷன்ட் வந்த்ருகாறு உடனே வாங்க" என்ற அலாரம் மிக சத்தமாக அடிக்கத் துவங்கும் பொழுது எட்வர்ட் கிளினிக் சென்று வைத்தியம் பார்த்து விட்டு மீண்டும் வீடு திரும்பிவிடுவார். 

ரிசப்சனிஸ்ட் சத்தம் ஊரையே கூட்டும் படி கேட்பதால் அக்கம்பக்கத்தார் எல்லாரும் எட்வர்டையும் அவரது ரிசப்சனிஸ்டையும் கேலி செய்யத் துவங்கினர், அவரின் கவுரவக் குறைச்சலுக்குக் காரணம் இந்த சம்பவம் தான்.

அப்பவிற்கு ஒரு பிரச்னை என்றல் மகன் களத்தில் இறங்க வேண்டாமா? அப்பாவின் பிரச்சனைக்கு தீர்வு காணத் தயாரான மார்க்கின் முதல் அறிய சாதனை தான் இன்று உலகையே கனக்டில் வைத்திருகிறது. மேலும் இதன் பின் மார்க் கண்டறிந்த ஒவ்வொர்ன்றுமே சமுகம் சார்ந்தது சமுக இணைப்பு சார்ந்தது...

No comments:

Post a Comment